அன்பின் பரிசு.
பாப்பா பாப்பா நீ சொல்லு
பாடம் முதலில் “அ” சொல்லு
அம்மாதானே ஆரம்பம்
அவளைப் போற்றி நீநில்லு.
இருக்கும் காலம் ஈடில்லை.
உனக்குள் ஊக்கம் ஊறில்லை.
எண்ணம் ஏக்கம் ஏறுமுகம்
ஐந்துள் அடக்கம் அன்னைமுகம்.
ஒழுக்கம் ஓதும் நன்பாடம்
விழுப்பம் ஆகும் பொன்போலும்.
ஔவை மொழியே செவ்வைநெறி
பவ்வியம் பழகி அவ்வழியறி.
பிறக்கும் நாளே பரிசாக
பெற்றால் தாயே உனையாக..
பரிசும் தந்தாள் அம்மாவும்
பதித்து முத்தம் அன்பாக.
மருத்துவம் தானே தாயவளே!
கருத்தும் காப்பும் நீயவளே!
வருத்தும் கல்வி தாயவளே!
பொருத்தும் செல்வம் நீயவளே!
அம்மா என்றால் அன்பேதான்.
அன்பே தெய்வம் அவளேதான்.
அவளே வாழ்வின் ஆதாரம்.
அவளொரு பிறவி அவதாரம்.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment