Saturday, 18 October 2025

இளைஞனே விழித்தெழு!

இளைஞனே நீ விழித்தெழு!!

இளைஞனே நீ விழித்தெழு.
எதிர் காலமுன்னை அழைக்கிறது.
நாளைய சமூகம் உனதானது
வேளை இதுதான் உணர்வானது.

எதிரே பாரது தெரிகிறதா.?
புதிராய் விடுகதை புரிகிறதா?
உன்னைச் சுற்றி சதிவலைகள்
கண்ணை மறைத்து விரிகிறதா?

உல்லாசம் சல்லாபம் எதற்காக?
எல்லாமே கெடுவினை அதற்காக.
எஃகு வலிமை உள்னுடலை
சிதைக்கும் செயலே சூழ்ச்சிவலை.

அடிமைப் பழக்கம் அபாயம்
குடிமது போதை பெரும்பாவம்
மயக்கிக் கொல்லும் சிற்றின்பம்
மயங்குதல் பாதகச் செயல்வன்மம்.

உடம்பை இரும்பாக் கட்டிடனும்
நரம்பை வலிமைப் படுத்திடனும்.
சுவரில்லாத சித்திரமா!
தவறில்லாத செயல்த் திறமா!

உடம்பு தானே பிரதானம்
கடமை அதற்குள் சன்னிதானம்.
உடலும் அறிவும் வலுவிருந்தால்.
முடிக்கும் செயலும் தெளிவிருக்கும்.

காலம் வெகுதூரம் எதிரிருக்கு.
காத்துக் கிடக்குது கனவதுக்கு.
இலக்கைக் குறிவை,! ஓடு!
அடையும் வரைக்கும் ஓயாதே.

விதைக்குங் காலம் விதையாதது,
விளையுங் காலம் விளையாது.
முளைக்கும் காலம் நோய்ப்பட்டால்
வளரும் காலமே முடிந்து விடும்.

படிக்கும் நேரம் படித்திடனும்.
பயனுறுங் காலம் கணித்திடனும்.
அறிவை ஏற்றி வளர்ந்திடனும்.
திறமை காட்டி உயர்ந்திடனும்.

உன்னை நம்பி முயன்றிடனும்
உன்னையே நம்பி வென்றிடனும்.
வலிமை தானே நம்பிக்கை
எளிமைத் தயர்வை அகற்றிடனும்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா

No comments:

Post a Comment