நாடே கடனில் நாடாள்பவன் அம்பானி.
பாடே வாழ்வான பாமரனோ பட்டினி.
ஓட்டை விற்றவன் ஓட்டைக் குடிசையில்
ஓட்டைப் வாங்கியவன் கோபுர மாளிகையில்.
நமக் கெதற்கு வம்பென நாலாம் தூண்
அமுக்கி வாசிப்பதும் அடங்கியதும் ஏன்?
பணநாயகம் வென்றும் சனநாயகம் தோற்றும்.
அநியாயம் ஆனதோ ஆகாத சுதந்திரம்.
பாவங்கள் மேயாட்டம் பகற்கொள்ளை பேயாட்டம்.
சாபங்கள் கோபங்கள் தியாகமெங்கே போராட்டம்.
உரிமைக்கு விலைபேசும் வறுமைக்குச் சாவிலையோ!
பெருமைக்குப் பேர்சொல்லும் மகான்கள் பிறப்பிலையோ!
அடிபட்டு மிதிபட்டு ஆயிரங்கள் பலியிட்டு,
விடியலைப் பெற்றுத் தந்தார் தியாகிகள்
விடியாமல் விடியுமுன்னே வேட்டையர்
நுழைந்திட்டார்.
அடைந்தது ஆகாசம் முடிந்தது இதிகாசம்.
சுற்றிச்சுற்றித் திரிகிறாள் சுதந்திரத் தாய் அழுகிறாள்.
நோகாமல் நுங்குதின்போர் சாகாமல் வாழுகிறார்.
மீண்டும் ஒருபாரதம் வேண்டும் வேண்டுமே
விஷ்ணு மறுஅவதாரம் கல்கியே வருகவே!
கவிஞர். கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment